கோவையில் நாளை தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு..!
DMK Youth League conference to be held in Coimbatore tomorrow
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்ற நிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நாளை, கோவையில் கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் மாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாநாட்டிற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம் , கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டில், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

இதையொட்டி கணியூர் டோல்கேட் அருகில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அவரது வழிகாட்டுதலின் படி, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் மாநாட்டு பந்தலில் நடைபெறும் பணிகளை உடனிருந்து கவனித்து வருகிறார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இவருடன், துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நிகழ்வில், அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நிகழ்வில் நன்றி கூறுகிறார்.
English Summary
DMK Youth League conference to be held in Coimbatore tomorrow