உதயநிதி தலைமையில் திமுக அடுத்தகட்ட வியூகம்!.தோல்வி குறித்த கள ஆய்வு முடிவுக்கு முன்பே களத்தில் அதிரடி! திமுகவில் நடப்பது என்ன?
DMK next strategy under Udhayanidhi Action on the field even before the field study on the defeat is over What is happening in DMK
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயம் இன்று மீண்டும் அரசியல் பரபரப்பின் மையமாக மாறியுள்ளது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயும் கள ஆய்வு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் சூழலிலேயே, கட்சியின் எதிர்கால அரசியல் வியூகங்களை வடிவமைக்க இளைஞரணி சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இளைஞரணி செயலாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த சந்திப்பில், மாநிலம் முழுவதிலுமிருந்து இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் விருதுநகர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மண்டல மாநாடுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம், திமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்தல், கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல், இளைஞர்களை மீண்டும் தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபடுத்துதல், எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய வியூகங்களை வகுத்தல் போன்றவை இந்த ஆலோசனையின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்வுகளை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலப்பணிகள், சமூக ஊடக பிரச்சாரங்கள் மற்றும் இளைஞர்களிடையே கட்சியின் கொள்கைகளை கொண்டு சேர்க்கும் புதிய திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைமையகம் எடுத்துள்ள மிக முக்கிய நடவடிக்கையாக 36 பேர் கொண்ட கள ஆய்வு குழு அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த குழுவினர் 234 தொகுதிகளிலும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் செயல்பாடு, உட்கட்சி பூசல்கள், மக்கள் மனநிலை, வாக்கு சரிவு ஏற்பட்ட காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின் போது மாவட்ட செயலாளர்கள் அல்லது தொகுதி பொறுப்பாளர்கள் உடன் இருக்கக் கூடாது என்று கட்சி தலைமை உத்தரவிட்டிருப்பது, இந்த ஆய்வை மிகவும் சீரியஸாக திமுக எடுத்துள்ளதை காட்டுகிறது.
ஒவ்வொரு தொகுதியின் அறிக்கைகளும் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு நேரடியாக தலைமைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. முழுமையான கள ஆய்வு அறிக்கை அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் கட்சிக்குள் பெரிய அளவிலான மறுசீரமைப்புகள், நிர்வாக மாற்றங்கள் மற்றும் புதிய தலைமுறைக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “திமுக ஏன் தோற்றது என்பதை கண்டுபிடிக்க 36 பேர் குழு அமைத்திருக்கிறது. இன்னும் அவர்களுக்கே தோல்விக்கான காரணம் புரியவில்லை” என்று விமர்சித்திருந்தது திமுகவினரிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில் நடைபெறும் இன்றைய இளைஞரணி ஆலோசனைக் கூட்டம், திமுகவின் அடுத்த அரசியல் திசையையும், எதிர்க்கட்சியாக அவர்கள் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
English Summary
DMK next strategy under Udhayanidhi Action on the field even before the field study on the defeat is over What is happening in DMK