கூட்டணியை வலுப்படுத்த திமுக தீவிரம்: ஓ பன்னீர் செல்வத்துக்கு திமுக கொடுத்த ஆஃபர்.. பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
DMK is serious about strengthening the alliance What happened in the talks regarding the offer made by DMK to O Panneerselvam
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனியாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்-ஐ கூட்டணிக்குள் கொண்டு வர திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முறை சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. திமுகவும் அதிமுகவும் வலுவான கூட்டணியுடன் களமிறங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்தே போட்டியிடுகிறது. தவெக சார்பில் விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், இதுவரை எந்தக் கட்சியும் அவரது தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த சூழலில்தான் திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. , பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களது கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தை திமுக கூட்டணிக்கு கொண்டு வருவது குறித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அந்த உரையாடலில், புதிய கட்சியை தொடங்கி திமுக கூட்டணியில் இணைவதோ, அல்லது நேரடியாக திமுகவில் இணைந்து செயல்படுவதோ குறித்து அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் பலம் மற்றும் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தில் உள்ள செல்வாக்கு குறித்து, தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் உடன் திமுக தலைமை ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆலோசனையில், “ஓ.பன்னீர் செல்வம் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுத் தரக்கூடியவர் அல்ல. 2021 சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக பறித்தது போல, ஓ.பன்னீர் செல்வம் இல்லை” என்று அந்த அமைச்சர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், பல முனைப் போட்டி நிலவுவதால், திமுக எந்த அரசியல் வாய்ப்பையும் தவறவிட விரும்பவில்லை. இதன் காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் திமுக கூட்டணிக்கு வந்தால் அது அரசியல் ரீதியாக பலமாக அமையும் என்ற கணக்கில், அவருக்கான கதவை திமுக முழுமையாக மூடவில்லை என்று கூறப்படுகிறது. இறுதி முடிவு ஓ.பன்னீர் செல்வத்தின் கையில்தான் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஓ.பன்னீர் செல்வம் அரசியலில் அடையாளம் பெற்றதும், முதல்வர் பதவியில் அமர்ந்ததும் அதிமுகவின் மூலம் என்பதால், அந்த கட்சியின் பிரதான எதிரியான திமுகவில் இணைவதில் அவர் தயக்கம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. அவரது விருப்பம் அதிமுகவுடன் மீண்டும் இணைவதே என்றாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த காரணத்தைக் கொண்டும் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, திமுக தேமுதிகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தேமுதிகவுக்கு 7 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்க திமுக உறுதியளித்துள்ளதாகவும், விரைவில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 173 இடங்களில் திமுக போட்டியிட்ட நிலையில், இந்த முறை சுமார் 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், திமுக கூட்டணி அமைப்பில் இன்னும் சில முக்கிய அரசியல் திருப்பங்கள் வரக்கூடும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
DMK is serious about strengthening the alliance What happened in the talks regarding the offer made by DMK to O Panneerselvam