'முதல்வர் விஜய்க்கே மிரட்டலா'...? - சர்ச்சைப் பேச்சால் அதிரடி கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ...!
Did he threaten Chief Minister Vijay DMK MLA arrested controversial speech
கோவில்பட்டியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜயை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக எழுந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை காவலர்கள் கைது செய்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவில்பட்டி கிருஷ்ணன்கோவில் திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கருணாநிதி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், சுப்பிரமணியன், கருப்பசாமி மற்றும் சின்னப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதல்-அமைச்சர் விஜயை விமர்சிக்கும் வகையில் கடுமையான கருத்துகளை வெளியிட்டார்.
குறிப்பாக, சட்டமன்றம் தொடர்பாகவும், தனிநபரை மிரட்டும் வகையிலும் அவர் பேசியதாக கூறப்படும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.இந்த உரையின் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் வெளியிட்டனர்.
அரசியல் விமர்சனத்தை தாண்டி, மிரட்டல் தொனியில் பேசப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், இந்த விவகாரம் மாநில அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியது.இந்த நிலையில், முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பதிவான குற்றச்சாட்டின் அடிப்படையில், இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற காவலர்கள், மார்க்கண்டேயனை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவாளர்கள், கைது நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதுடன், காவலர் வாகனத்தின் முன் திரண்டு மறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி, மார்க்கண்டேயனை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், விசாரணைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பகட்ட விசாரணை நிறைவடைந்த பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விளாத்திகுளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக அரசியல் களத்தில் விவாதமும் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.
English Summary
Did he threaten Chief Minister Vijay DMK MLA arrested controversial speech