"வரலாறு தெரியாமல் பேசுவதா? மிசா குறித்து தவெக அமைச்சர்கள் நிறைய படிக்க வேண்டும்": மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமான சாடல்!
CPM State Secretary Shanmugam Slams TVK Minister Nirmalkumar Over MISA Remarks Calls It Childish and Ignorant
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் மிசா (MISA) கைது குறித்துச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துகள் முற்றிலும் அறியாமையின் வெளிப்பாடு என்றும், வரலாறு தெரியாமல் திமுகவின் மீதான வெறுப்பில் அமைச்சர்கள் சகட்டுமேனிக்கு பேசுவது தவறானது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாகச் சாடியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைதானவர்கள் ஏதோ சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டதைப்போல அமைச்சர் நிர்மல்குமார் அவையில் பேசியது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது எனக் குறிப்பிட்டார். நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் போராடிச் சிறை சென்ற தலைவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், அமைச்சர்கள் சேற்றை வாரி வீசுவது போல் பேசக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், தவெக அமைச்சர்கள் முதலில் மிசா சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வரலாற்றுப் பின்னணிகள் குறித்து நிறையப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய பெ. சண்முகம், அரசியல் மற்றும் வரலாற்று அறிவு இல்லாமல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றத்தில் இதுபோன்று பேசுவது அவையின் மாண்பைக் குறைப்பதாக உள்ளது எனத் தெரிவித்தார்.
English Summary
CPM State Secretary Shanmugam Slams TVK Minister Nirmalkumar Over MISA Remarks Calls It Childish and Ignorant