தொடரும் விபத்துகள்... ஆறாத வடுக்கள்...! பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு எங்கே...? - ஜி.கே.வாசன் அதிரடி வலியுறுத்தல்...!
Continuing accidents unhealed scars Where safety cracker factories GK Vasan urges action
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவருக்கு தமிழக அரசு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் உடனடியாக வழங்கி, உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவரது உடல்நிலை சீராகும் வரை உரிய மருத்துவக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய கேள்வியை எழுப்புகின்றன.
அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆபத்தான சூழலில் பணியாற்றும் தொழிலாளர்கள், எந்த நேரத்திலும் விபத்து நேரிடுமோ என்ற அச்சத்துடன் வேலை செய்யும் நிலை ஏற்படக்கூடாது. உழைக்கும் மக்களின் உயிர் பாதுகாப்புக்கு முதலிடம் அளிக்க வேண்டியது அவசியம்.எனவே, பட்டாசு ஆலை நிர்வாகங்கள் அரசு வகுத்துள்ள அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் முறையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.அதேபோல், தமிழக அரசும் பட்டாசு ஆலைகளை அவ்வப்போது ஆய்வு செய்வதுடன் நின்றுவிடாமல், தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக உள்ளதா, அனுமதிக்கப்பட்ட நடைமுறைகளின்படியே ஆலைகள் செயல்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அதிகபட்ச நிவாரண உதவியை வழங்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர் விரைவில் குணமடைய வேண்டுமெனும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
English Summary
Continuing accidents unhealed scars Where safety cracker factories GK Vasan urges action