துண்டு ஒரு தடவைதான் தவறும்; '2029 ராகுல் காந்திதான் பிரதமர்; காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் உறுதி..!
Congress MP Sashikanth Senthil says it is certain that Rahul Gandhi will become Prime Minister in 2029
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையால் தேர்தல் நடத்தப்பட்டு, ஆவடி மாநகர தலைவராக பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அமீத்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய மாநகர தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில், முன்னாள் மாவட்ட தலைவர் யுவராஜ், விவசாய பிரிவு தலைவர் பவுன் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, ஆவடி பட்டாபிராமில் உள்ள காமராஜர், அம்பேத்கர் மற்றும் ராஜிவ் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய எம்பி சசிகாந்த் கூறியதாவது: ஆவடி பகுதிக்கு வரலாறு உள்ளது. காங்கிரசுக்கும் வரலாறும் உள்ளது. காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் பணியால் இன்றும் தமிழகத்தில் காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளது என்று கூறியுள்ளார். அத்துடன், கடந்த 2024-இல் ராகுல் பிரதமராவது தவறிவிட்டது. ஆனால், அடுத்த 2029-இல் அவர் பிரதமர் ஆவது மிஸ் ஆகாது என்று தெரிவித்துள்ளார்.

அதற்காக நாம் உழைக்கவேண்டும் என்றும், ஆவடி தொகுதி குறித்து நிர்வாகிகள் தங்கள் விருப்பதை தெரிவித்துள்ளனர். நிச்சயம் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து ஆவடி தொகுதியை வெற்றிபெற முயற்சிப்பேன் என்று நம்பிக்கை கொடுத்து பேசியுள்ளார்.
மேலும், பாசிடிவான செய்திகள் விரைவில் வரும் என்றும், கூடுதல் இடங்கள் குறித்து இரு கட்சி தலைவர்களும் முடிவெடுப்பார்கள் என்று கூறியுள்ளார். அத்துடன், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'தற்போது நடைபெற உள்ளது சாதாரண தேர்தல் மட்டுமல்ல கொள்கை சார்ந்த போர், இப்படிப்பட்ட நேரத்தில் தெளிவாக தலைவர்கள் முடிவெடுப்பார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், விஜய்க்கு நெருக்கடி என்பது பாஜகவின் முறை என்றும், காங்கிரசுக்கு அனைத்து கிராமங்களிலும் கிளை உள்ளது. ஆவடி தொகுதி குறித்து எல்லோருடைய எண்ணத்தையும் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Congress MP Sashikanth Senthil says it is certain that Rahul Gandhi will become Prime Minister in 2029