“நல்ல படம் இரண்டு மூன்று நாட்கள் மனதை கலங்கடிக்கும்” – ‘தலைவர் தம்பி’ படத்தை பாராட்டிய இயக்குநர் ராஜகுமாரன்
A good film will disturb the mind for two or three days Director Rajakumaran praises Thalaivar Thambi
இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன், சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். தமிழில் சில படங்களை மட்டுமே இயக்கியுள்ள அவர், தற்போதைய சினிமாவிலிருந்து முழுமையாக விலகி இருந்தாலும், அவரது பேட்டிகளில் கூறும் கருத்துகள் அடிக்கடி கவனம் ஈர்த்து சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன. அந்த வரிசையில், அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
விக்ரமன் இயக்கத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜகுமாரன், ‘நீ வருவாய் என’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் ஓரளவான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படத்தை இயக்கினாலும், அது எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்த இரண்டு படங்களிலும் தேவயானியே நாயகியாக நடித்திருந்தார். அந்தப் படப்பிடிப்புகளின் போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தேவயானி – ராஜகுமாரன் காதல், திரையுலகத்தையும் தேவயானியின் குடும்பத்தையும் அதிர்ச்சியடைய வைத்தது. குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, தேவயானி வீட்டை விட்டு வெளியே வந்து ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தேவயானி தொடர்ந்து நடிப்பில் பிஸியாக இருந்தாலும், ராஜகுமாரன் படிப்படியாக சினிமாவிலிருந்து விலகினார். இடையில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களில் நடித்தாலும், அவை பெரிய அளவில் கவனம் பெறவில்லை.
சமீப காலமாக அவர் அளித்து வரும் பேட்டிகளில், இயக்குநர் மகேந்திரன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ போன்ற படங்களை விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், “அவருக்கு எந்தப் படம்தான் பிடிக்கும்?” என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில், தனது சமீபத்திய பேட்டியில் ராஜகுமாரன், ‘தலைவர் தம்பி’ படத்தை மனமார பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“‘நீ வருவாய் என’ படத்தின் பிரிண்ட்டை க்ளீன் செய்வதற்காக ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்றிருந்தேன். அப்போது தலைவர் தம்பி தலைமையில் அந்தப் படத்தை பார்த்தேன். ரொம்ப நல்ல படம். குறை சொல்ல எதுவுமே இல்லை. சின்ன கன்டென்ட்டை வைத்து அருமையாக செய்திருக்கிறார்கள்.
ஒரு படம் உண்மையிலேயே நல்ல படமாக இருந்தால், அது நம்மை இரண்டு மூன்று நாட்கள் மனதளவில் டிஸ்டர்ப் செய்யும். அந்த வகையில் அந்த படம் என்னை ரொம்ப பாதித்தது. ‘நீ வருவாய் என’ படத்தின் இரண்டாம் பாகம் செய்ய நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தையே அந்த படம் மாற்றிவிட்டது.அந்த படம் ஹிட்டானதில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாருக்கும் மகிழ்ச்சி.”
எல்லா புதிய படங்களையும் விமர்சிப்பவராக பார்க்கப்பட்ட ராஜகுமாரன், இப்படி ஒரு படத்தை மனதார பாராட்டியிருப்பது தற்போது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “விமர்சனம் மட்டுமல்ல, நல்லதை பாராட்டவும் அவர் தயங்கவில்லை” என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
A good film will disturb the mind for two or three days Director Rajakumaran praises Thalaivar Thambi