பந்தா இல்லாத முதல்வர்! வீட்டில் இருந்து சாப்பாடு... விஜய்யின் எளிமை...! - வியப்பில் அதிகாரிகள்...!
Chief Minister without Bandh Food from home Vijay simplicity Officials surprised
தமிழகத்தின் 12வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்று புதிய அரசின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு விழா காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு அவர் காலை 8.48 மணிக்கே வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து மறுநாள் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவிலும் நேர்த்திக்கான தனது முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிகழ்வுக்காக, அவர் காலை 8.45 மணிக்கே தலைமைச் செயலகத்தில் வருகை தந்தார்.
மேலும், 12ஆம் தேதி நடைபெற்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலிலும், 13ஆம் தேதி நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பிலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே அவையில் கலந்துகொண்டு தனது பணிப்பற்று மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக, நம்பிக்கை வாக்கெடுப்பு காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், அவர் காலை 9 மணிக்கே தலைமைச் செயலகத்தை வந்தடைந்தார்.மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னரும், தனது வழக்கமான நிர்வாகப் பணிகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்வதில் முதல்-அமைச்சர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.
நேற்று, அரசு அலுவலர் போல காலை 9.55 மணிக்கே தலைமைச் செயலகம் வந்த அவர், மாலை 4 மணி வரை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டார். மதிய உணவையும் வீட்டிலிருந்து எடுத்துவந்து, தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலக அறையிலேயே எளிமையாக உணவருந்தினார்.
பின்னர், நாள் முழுவதுமான பணிகளை நிறைவு செய்து மாலை 4 மணியளவில் இல்லத்திற்குத் திரும்பினார். முதல்-அமைச்சரின் நேர்த்தி, எளிமை மற்றும் அலுவல் ஒழுக்கம் குறித்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மத்தியில் பாராட்டு குரல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chief Minister without Bandh Food from home Vijay simplicity Officials surprised