தவெக அரசு பிஜேபியோட 'சிலீப்பர் செல்'...! - மார்க்கண்டேயன் கைதால் கொதித்தெழுந்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி...!
tvk government sleeper cell BJP Former DMK minister Raghupathi angered by Markandeyan arrest
விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறாக பேசியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், தி.மு.க. முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று மார்க்கண்டேயனை சந்தித்தனர்.

சந்திப்பை முடித்துக்கொண்டு சிறையில் இருந்து வெளியே வந்த ரகுபதி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,"த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அரசை விமர்சித்து சாதாரணமாக கருத்து தெரிவிப்பவர்கள்கூட குறிவைக்கப்பட்டு, அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
தற்போதைய த.வெ.க. அரசு, பா.ஜனதாவின் மறைமுக அழுத்தத்துக்கு ஏற்ப செயல்படும் 'சிலீப்பர் செல்' போன்று இயங்கி வருகிறது. பா.ஜனதாவின் உத்தரவுகளுக்கு இணங்காவிட்டால் நிதி தடைபடும் என்ற அச்சத்திலேயே அரசு செயல்படுகிறது.மக்கள் மீது அரிசி விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட பொருளாதார சுமைகளை சுமத்திவிட்டு, சட்டமன்றத்தை மக்கள் பிரச்சினைகள் விவாதிக்கப்படும் ஜனநாயக மன்றமாக அல்லாமல், திரைப்படக் கொட்டகை மற்றும் தயாரிப்பு நிறுவனமாக மாற்றியுள்ளனர்.
'ஜனநாயகன்' திரைப்படத்தில் 4 அமைச்சர்கள் நடித்துள்ள நிலையில், கரூர் சம்பவத்தின்போது கண்ணீர் சிந்தாதவர்கள் தற்போது அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் வடிப்பதாக ரகுபதி விமர்சித்தார்.சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வெளிநடப்பு செய்வதற்கான முழு உரிமையும் உள்ளது.
ஆனால், 'சட்டமன்றக் கதவுகளை மூடுங்கள்' என்று முதலமைச்சர் விஜய் கூறியிருப்பது, சட்டமன்ற உறுப்பினர்களை சிறைக்குள் அடைப்பதற்கு இணையான ஜனநாயக உரிமை மீறலாகும்.
சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தி, உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை பட்டா மாற்றம் செய்து முறைகேடாக கையகப்படுத்துவதும், அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதும் தான் த.வெ.க. ஆட்சியின் உண்மையான முகம் என்றும் ரகுபதி குற்றம்சாட்டினார்.
English Summary
tvk government sleeper cell BJP Former DMK minister Raghupathi angered by Markandeyan arrest