முதலமைச்சர் பங்கேற்றுள்ள 'ரோடு ஷோ' மதுரையில் தொடக்கம்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..!
Chief Minister Stalins road show begins in Madurai
மதுரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ள 'ரோடு ஷோ' நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) தி.மு.க., மாநில பொதுக்குழுக் கூட்டம் நடவுபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கி.மீ., தொலைவுக்கு நடக்கும் 'ரோடு ஷோ' நிகழ்ச்சி மாலை தொடங்கியுள்ளது. அதாவது, பெருங்குடி சந்திப்பிலிருந்து தொடங்கிய 'ரோடு ஷோ' அவனியாபுரம், மருதுபாண்டியர் சிலை, பெரியார் சிலை, வில்லாபுரம் ஆர்ச் வரையுள்ள ரோடு, ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, ஜீவாநகர் சந்திப்பு, சந்தராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்., நகர் மேம்பாலம், மாடக்குளம் சந்திப்பு, ஜி.ஆர்.டி., ஓட்டல் ரோடு, பழங்காநத்தம், ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல் சந்திப்பு, குரு தியேட்டர் சந்திப்பு வரையுள்ள திண்டுக்கல் ரோடு, மற்றும் ஆரப்பாளையம் வரை திறந்த வாகனத்தில் நின்றபடி சென்று முதலமைச்சர் மக்களை சந்திக்கிறார். அத்துடன் சாலையில் இறங்கி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலைகள் நெடுகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக ஆளுநரும் நேற்று திருச்சி சென்ற நிலையில், ராமேஸ்வரம் சென்றார். இன்று அதிகாலை 05:25 மணிக்கு ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, பின்னர் தனுஷ்கோடி சென்றார்.
அங்கிருந்து மதுரைக்கு திரும்பிய அவர் ரிங் ரோட்டில் உள்ள ஓட்டலில் ஓய்வு எடுத்த பின்னர் மாலை 04:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். இன்று இரவு -7:30 மணிக்கு சென்னைக்கு புறப்படவுள்ளார். ஒரே நேரத்தில் முதலமைச்சர் மற்றும் ஆளுநர் மதுரையில் இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Chief Minister Stalins road show begins in Madurai