'வட்ட செயலாளர் என்னிடம் என்ன பேசினார் என்பதை அண்ணாமலை வெளியிட்டால் நன்றாக இருக்கும்'; அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!
Minister Ma Subramanian replied that it would be good if Annamalai published what the district secretary said to me
சென்னை அண்ணா பல்கலை. மாணவியை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் குறைந்தது 30 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் அதற்குப் பிறகே, அவரது விடுதலை குறித்து பரிசீலிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த ஞானசேகரன் விவகாரத்தில், தி.மு.க., வட்ட செயலாளர் சண்முகத்துடன் தான் என்ன பேசினேன் என்பதை அண்ணாமலை வெளியிடட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் அங்கு பேசுகையில் கூறியதாவது: விழுப்புரத்தில் கொரோனாவால் இறந்தவர் எனக்கூறப்படுபவரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இது குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதனை கொரோனா இறப்பாக எடுத்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது பரவும் கொரோனா வீரியம் இழந்தது என்றும் நான்கு நாட்களில் அது சரியாகிவிடும். இந்த கொரோனாவை கண்டு பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன், முதியவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்றும், அதிமுக ஆட்சி காலத்தில் 02 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இருந்தநிலையில், தற்போது 03 ஆயிரம் மெட்ரிக் டன் சேமிக்கும் அளவுக்கு வசதி உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான ஞானசேகரன் என்னுடன் பேசினார் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறவில்லை. சண்முகம் என்ற வட்ட செயலாளர் தான் என்னிடம் பேசியதாக கூறினார். ஆகவே ஞானசேகரனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஞானசேகரன் என்னுடன் ஒரு முறை கூட போனில் பேசியது இல்லை எனவும், ஞானசேகரன், சைதை தொகுதியைச் சேர்ந்தவன் என்பதால், கோட்டூர் வட்டத்தை சேர்ந்தவன். ஒரு முறை மழை வெள்ளத்தை பார்வையிட நானும், துணை மேயர் மகேஷ்குமாரும், அலுவலர்களும் சென்றோம். அப்போது காலை சிற்றுண்டியை வட்ட செயலாளர் வாங்கி வந்து அவனது வீட்டு வாசலில் சாப்பிட வைத்தார். அவன் அப்போது, என்னுடன் ஒரு போட்டோ எடுத்ததை தவிர எனக்கும் அவனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணாமலை அவர்கள் சண்முகம் என்னிடம் போனில் பேசினார் என்று கூறிய குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். அன்றைக்கு சண்முகம் என்னை போனில் அழைக்கக் காரணம், அந்த வட்டத்தில் 02 ஆயிரம் முதியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு கூப்பிட அழைத்தார் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், போன் நம்பரை எடுத்து சண்முகம் என்னை அழைத்ததை கண்டுபிடிக்க முடிந்த அவருக்கு, அந்த போனில் எனது குரலை எடுக்க வாய்ப்பு இருக்கும். அப்போது நாங்கள் என்ன பேசினோம் என்பது தெரியும். அதையும் எடுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம்கூறியுள்ளார்.
English Summary
Minister Ma Subramanian replied that it would be good if Annamalai published what the district secretary said to me