சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்: கடிதங்களை அனுப்பி கெஞ்சியுள்ள பாகிஸ்தான்..!
Pakistan has sent letters pleading for the re-implementation of the Indus Water Treaty
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை இந்தியா கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு நான்கு கடிதங்களை பாகிஸ்தான் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் இந்தியாவிடம் கெஞ்சியது. ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை நிறுத்தும் வரை ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டுக்கு வராது என இந்தியா உறுதியாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,தற்போது பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், சிந்து நதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பாகிஸ்தான் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசா, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையுடன் மேலும் 03 கடிதங்களை அவர் இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சிந்து நதிநீர் விவகாரத்தில் உலக வங்கி தலையிட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan has sent letters pleading for the re-implementation of the Indus Water Treaty