இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாதாகி விடும் - ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம்!
Chennai HC GS Election case 2023
அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், விஜயநாராயண் ஆஜராகி உள்ளனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், ஸ்ரீராம், மணிசங்கர் ஆகியோர் செய்த வாதம் பின்வருமாறு :
பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கில் பதில் மனுவுக்கு அவகாசம் கேட்டுவிட்டு, பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர் என்று ஓபிஎஸ் தரப்பு குற்றஞ்சாட்ட, அதற்க்கு நாங்கள் அவகாசம் கோரவில்லை என்று இ.பி.எஸ். பதிலளித்தது.
தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், "இன்று மாலை வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதாக கூறிவிட்டு, பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படலாம். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை பொதுக்குழு வழக்கை விசாரித்து நீதிமன்றம் தள்ளிவைத்த நிலையில், அன்று மாலையே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு எவரும் அடைய முடியாது. தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் அங்கீகரிக்கவில்லை.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு 5 ஆண்டுகள் தலைமைக்கழக நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைமைக்கழக நிர்வாகிகளாக இல்லாத கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் எவரும் போட்டியிட முடியாது.
ஓரிரு நாட்களில் பதிலளிக்க இபிஎஸ்.,க்கு உத்தரவிட வேண்டும்; அதுவரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். பொதுச்செயலாளர் தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாதாகி விடும்.
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் கலைக்கப்படவில்லை, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் இதை தீர்மானிக்கவில்லை; இரு பதவிகளும் தற்போது சட்டப்படி உள்ளது" என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.
தற்போது ஓ.பி.எஸ். தரப்பு வாதம் நிறைவடைந்து இ.பி.எஸ். தரப்பு வாதம் தொடங்கி உள்ளது.
English Summary
Chennai HC GS Election case 2023