மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு அதிமுக அமைச்சர் பரிந்துரை?! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!
CHENNAI HC CASE FEB 23
தமிழகத்தின் மனித உரிமை ஆணைய தலைவர் பதவி கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்தது. இந்தப் பதவிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் லோகேஷ்வர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரின் அந்த மனுவில்,
"தகுதி உடையவர்களின் பெயர்களை பரிசீலனை செய்யாமல் தமிழக சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்து ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர் உள்ள நிலையில், இரண்டு ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்ட நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டு இருப்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனவே அவரது நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்." என்ற அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் ஆஜரான ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்கக் கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து 4 வாரங்களுக்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.