கரூர் கூட்டநெரிசல் துயரச் சம்பவம்: முன்னாள் கூடுதல் எஸ்பி பிரேமானந்தத்திடம் சிபிஐ அதிரடி விசாரணை!
CBI Resumes Investigation into Karur TVK Rally Stampede Questioning Former Additional SP Premanandham
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கையில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகிறது. கரூரில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான சுற்றுலா மாளிகையில் முகாம் அமைத்துள்ள சிபிஐ அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் எனப் பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அண்மையில் கரூரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால், தேர்தல் பணிகள் காரணமாக சிபிஐ அதிகாரிகளின் இந்த விசாரணை தற்காலிகமாக முடங்கி இருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதல் சிபிஐ தனது அடுத்தகட்ட விசாரணையை மீண்டும் அதே வேகத்தில் தொடங்கியுள்ளது.
விசாரணை மீண்டும் தொடங்கிய முதல் நாளில், கூட்டநெரிசல் ஏற்பட்ட சமயத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வாங்கல் காவல் ஆய்வாளர் சையத் அலி மற்றும் கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவல் துறையினரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையன்று, சம்பவத்தின் போது பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ஆர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, சனிக்கிழமை காலையில் இந்த வழக்கின் முக்கிய நகர்வாக, நெரிசல் சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்த பிரேமானந்தத்திற்குச் சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. சம்மனை ஏற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரான முன்னாள் கூடுதல் எஸ்பி பிரேமானந்தத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சம்பவத்தன்று எடுக்கப்பட்ட அவசரகால நடவடிக்கைகள் குறித்து அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
CBI Resumes Investigation into Karur TVK Rally Stampede Questioning Former Additional SP Premanandham