தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
CBI officials are questioning the TVK office administrator stampede Karur
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் மரண விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து சாட்சியங்களையும் ஆதாரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 3 அன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கட்சியின் நிர்வாகி நிர்மல்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு, விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, பனையூர் அலுவலக உதவியாளர் குரு சனிக்கிழமை கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வந்து அந்த கேமரா பதிவுகளை ஒப்படைத்தார். அவருடன் தவெக தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் அரசு உடனிருந்தார். சுமார் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு இருவரும் வெளியேறினர்.
இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாகவும் தவெக வழக்கறிஞர், அலுவலக நிர்வாகி, உதவியாளர் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதே சமயம், சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடமான வேலுச்சாமிபுரம் சாலையை 3டி லேசர் ஸ்கேனர் கருவியால் ஆய்வு செய்ததுடன், அன்றைய தினம் பதிவான சிசிடிவி காட்சிகளையும் சேகரித்துள்ளனர். இந்த விசாரணை முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் முக்கிய முன்னேற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
CBI officials are questioning the TVK office administrator stampede Karur