தமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்! ஆட்சியை தக்கவைக்குமா அதிமுக!
by election in nanguneri
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளையும், அதிமுக 9 தொகுதிகளையும் கைப்பற்றியது. தேர்தல் நடைபெற்ற 22 தொகுதியில் 21 இல் வென்றால் திமுக ஆட்சி அமைக்கலாம் என்ற சூழல் இருந்த நிலையில் அது தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் தற்போது கட்சிகளின் பலத்தின் படி அதிமுக ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. 234 தொகுதிகளை கொண்ட சட்டசபையில் 118 தொகுதிகள் பெரும்பான்மைக்கு தேவையாகும். தற்போதைய அதிமுகவின் பலம் 122 என்ற அளவில் உள்ளது. திமுக - 101, காங்கிரஸ் - 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1, சுயேட்சை - 1, சபாநாயகர் - 1 என்ற அளவில் உள்ளது. சபாநாயகருடன் அதிமுக 123 இடமும், திமுக கூட்டணி 110 இடமும் வைத்துள்ளார்கள். விரைவில் 1 தொகுதி காலியாக உள்ளது. அது திமுக கூட்டணி கட்சியான காங்கிரசின் இடம் ஆகும். அப்போது 109 திமுக கூட்டணி பலமாக இருக்கும்.
நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வசந்தகுமார் எம்.எல்.ஏ, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் நாங்குநேரி தொகுதி காலியிடமாகும். அதனால் அங்கு நிச்சயமாக விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும்.
இதற்கிடையே தமிழகத்தில் 11 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கும் இருப்பதால் அதுவும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. ஒருவேளை தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அதிமுக பலம் 112 ஆக மெஜாரிட்டியுடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 6 தொகுதிகளை வெல்ல வேண்டிய நெருக்கடி அதிமுகவிற்கு ஏற்படும். ஆனால் இதெல்லாம் நடந்து முடிப்பதற்குள் மிச்சம் இருக்கும் இரண்டு ஆண்டுகளும் அதிமுக நிறைவு செய்யவும் வாய்ப்புள்ளது.
இதனால் இந்த ஆட்சி இனி கவிழும் வாய்ப்பு என்பது நிகழாத ஒன்று தான். அதிமுக தங்கள் ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. திமுகவும் ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு அமையாது. குதிரை பேரம் நடத்தி அதிமுக உறுப்பினர்களை திமுக அழைத்தால் மட்டுமே அதிமுக ஆட்சி கலையக்கூடிய அதிசயம் நடைபெறலாம். நாங்குநேரி தொகுதியில் தனியாக தேர்தல் நடைபெற்றால் வெற்றி பெற்று அதிமுக தங்களுடைய முழு பலத்தையும் காட்டலாம். ஆக மொத்தம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பாதுகாப்பாகவே இருக்கும்..