கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல்..., ஆளும் திமுக, முதல்வர் ஸ்டாலின், அமைச்சரை கேள்வி கேக்கும் அறப்போர் இயக்கம்.!
arappor iyakkam say about dindigul accident
சாலை ஓரங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சாலை ஓரங்களில் கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுவதும், இதனால் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளாகத்தில், சமூக நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக, அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்ரபாணி ஆகியோர் வர இருந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக திமுகவினர் சாலை நடுவே சென்டர் மீடியன்களில் திமுக கட்சி கொடி கம்பத்தை நட்டு இருந்தனர். அந்த வழியாக பேகம்பூர் பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, திமுக கொடி கம்பம் சாய்ந்ததில் அன்வரின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த அன்வரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"இப்படி விபத்துகள் நடக்கும் என்று திரும்ப திரும்ப எச்சரித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஆளுங்கட்சி என்ற பொறுப்பு இல்லாமல் மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறி கட்சி கொடி வைத்து விளம்பரம் செய்பவர்களை என்ன தான் செய்வது?" அமைச்சர் சக்கரபாணி, திமுக மற்றும் திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
arappor iyakkam say about dindigul accident