விஜய்யின் பரப்புரை ரத்துக்கு காவல்துறைதான் காரணம்; என். ஆனந்த் குற்றச்சாட்டு...!
Anand alleges that the police are responsible for the cancellation of Vijays campaign
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். அதன்படி, பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல், முதல் கட்ட பிரசாரம் தொடங்கிய நிலையில், வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு காவல்துறை போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே காரணம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த விஜய்; தொடர்ந்து, இன்று தேர்தல் பரப்புரையையும் தொடங்கியுள்ளார். அதற்காக, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வில்லிவாக்கம் தொகுதியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருந்ததால் பரப்புரை நடைபெறும் இடத்தில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்திற்குச் செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல் இல்லை.
மேலும், முன்னெச்சரிகை நடவடிக்கைகள் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், விஜயின் பரப்புரைக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனத் தெரிவித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-கை சந்தித்து இன்று மனு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Anand alleges that the police are responsible for the cancellation of Vijays campaign