பரபரப்பை கிளப்பிய ஜெயக்குமார்! டெல்லியுடன் தொடர்பா? எஸ்.பி வேலுமணியின் ரியாக்ஷன்!
AIADMK SPVelumani response to annamalai comments
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு கிளப்பி உள்ளது. இந்த. நிலையில் கோவை மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டமானது முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள்னை சந்தித்த எஸ்.பி வேலுமணியிடம் அதிமுக தயவு என்று பாஜக வெற்றி பெறும் என்ற அறியாமையில் முன்னாள் அமைச்சர்கள் பேசுவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எஸ்.பி வேலுமணி "இது குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான ஜெயகுமார் தெளிவாக கூறிவிட்டார். தமிழ்நாட்டில் பக்குவமாக சிறந்த தலைவர் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான். ஒரு பேட்டி கொடுத்தாலும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் அற்புதமாக சரியான முறையில் பொறுப்பாக பேசக்கூடியவர் தான் எங்கள் பொதுச் செயலாளர்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த தலைவர்கள் குறித்து தேவையில்லாமல் அண்ணாமலை பேசி இருக்கக் கூடாது என்பதால் என்னுடைய கருத்து.

அண்ணா ஆரம்பித்த திமுகவை குடும்ப சொத்தாக வைத்துக் கொண்டு முழு பலனை அனுபவிக்கும் முதலமைச்சர் இது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் அதிமுக இதற்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசிய போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அதேபோன்று அண்ணாவைப் பற்றி பேசும் போது உடனடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், கூட்டணி முக்கியமல்ல. எங்கள் கொள்கைக்கு யார் பங்கம் ஏற்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். திராவிட கொள்கைகளை பேணி காக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அமையும் எங்கள் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்வோம்.

சட்டமன்ற பொதுத் தேர்தல் இப்போது வந்தாலும், எப்போது வந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக வருவார். எங்களுக்கு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். டெல்லிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் தங்கமணியும் தனித்தனியாக செயல்பட்டு வருவதாக கூறுவது முற்றிலும் தவறு. எங்கள் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான். அவர் சொல்லும் கருத்து தான் எங்களின் ஒட்டுமொத்த கருத்தும்" என எஸ்.பி வேலுமணி மீது எழுந்த விமர்சனங்களுக்கும் பதில் அளித்துள்ளார்.
English Summary
AIADMK SPVelumani response to annamalai comments