ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அவசர ஆலோசனை.. அதிமுகவில் நடக்கப்போகும் மாற்றம்.?
admk meeting on july 22
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு, பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரையில் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல், சர்வாதிகாரப் போக்கு நடைபெற்று வருவதாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் டிசம்பருக்குள் நடத்தி முடிக்கப்படும் என அக்கட்சி சார்பில் உறுதி அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், உட்கட்சித் தேர்தல் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் உட்கட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.