Ex MP நான்... எனக்கே அதிமுகவில் பதவி தரவில்லை - குமுறிய நடிகர் ராமராஜன்!
actor ramajan ex mp admk eps
ஶ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள்பட்டி தெருவில் நடிகர் ராமராஜன் தொடங்கிய நற்பணி மன்ற அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ராமராஜன் கூறியதாவது: “நற்பணி மன்றத்தில் உறுப்பினராக சேருவதற்கு இங்கு மட்டும் பணம் கட்ட வேண்டும் என்று ஒரு நடைமுறை உள்ளது. தற்போது 60 ஆயிரம் ரூபாய் கட்டி 32 பேர் இணைந்துள்ளனர். ரசிகர் மன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு திருமண வாய்ப்புகளும் கிடைக்கின்றன. கண் பார்வையற்ற தாமரைக்கனி தலைவராக இருந்து மன்றத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
1967-ஆம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர் பெயரே அரசியல் களத்தில் ஒலிக்கிறது. இன்றைய அரசியல் சூழலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி நாள்வரை கூட அரசியல் மாறலாம். நான் உயிருடன் இருக்கும் வரை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியைப் பின்பற்றுவேன்.
அதிமுகவில் நான் முன்னாள் எம்.பியாக பணியாற்றியிருந்தாலும், இப்போது எந்தப் பொறுப்பும் அளிக்கப்படவில்லை. எனவே, கட்சியின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கருத்து சொல்ல இயலாது. குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படுவது இயல்பானதுதான்; அதேபோலவே அதிமுக உட்கட்சி பிரச்சினையும் பார்க்கப்பட வேண்டும். இறுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிதான் கட்சி செல்லும்.
நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, அதை மக்கள் தீர்மானிப்பார்கள். அவர் எந்த பாதையில் சென்றாலும் அதற்கான முடிவை மக்களே எடுப்பார்கள்” என்று ராமராஜன் தெரிவித்தார்.
English Summary
actor ramajan ex mp admk eps