பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியர்கள் சுற்றுலாவுக்கு வர அனுமதி வழங்கும் வெளிநாடுகள்; வேறென்ன ஆதாரம் வேண்டும்..?
Foreign countries that allow Indians to visit as tourists without a passport
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. ஆனால், இந்திய பாஸ்போர்ட் இல்லாமலேயே வெளிநாடு செல்ல விரும்பும் பயணிகளுக்கு நேபாளம் மற்றும் பூட்டானுக்கு செல்ல முடியும். இந்திய குடிமக்கள் இந்த நாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் அல்லது விசா தேவையில்லை. அதற்கு பதிலாக அரசால் வழங்கப்பட்ட சில அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் போதுமானவை.
காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம், இயற்கை எழில் கொஞ்சும் போக்ராவில் உள்ள போக்ரா சர்வதேச விமான நிலையம் மற்றும் புத்தர் பிறந்த இடத்திற்கு அருகிலுள்ள கௌதம புத்த சர்வதேச விமான நிலையம் (பைரவா) ஆகிய மூன்று இடங்களுக்கும் இந்தியர்கள் பாஸ்போர்ட் இன்றி பயணிக்கலாம்.
இந்த விமான நிலையங்களில் இறங்கியவுடன், இந்திய குடிமக்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய இதர அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் காண்பித்து அனுமதி பெறலாம். அத்துடன், பசுபதிநாத் கோயில் தரிசனம் மற்றும் இமயமலைச் சாரல் பயணங்களுக்கு இது அதிகம் உதவும்.
பூடான் -இந்தியர்களுடன் கொண்டுள்ள ஒரு சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாஸ்போர்ட் இல்லாத பயணத்தை அனுமதிக்கிறது. அதன்படி, பூடானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் இந்தியர்கள், பாஸ்போர்ட்டிற்கு பதிலாகத் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி நுழைவு அனுமதி பெறலாம். குழந்தைகளுடன் பயணிக்கும்போது அவர்களின் பிறப்புச் சான்றிதழை உடன் வைத்திருப்பது அவசியமாகும்.
பாஸ்போர்ட் தேவையில்லை என்றாலும், இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் வலுவான ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும். குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டை மிகவும் நம்பகமான ஆவணமாகக் கருதப்படுகிறது.
அத்துடன் ஆதார் கார்டு மற்றும் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் உடன் எடுத்துச் செல்வது பாதுகாப்பானது. பயணத்திற்கு முன்னதாக தற்போதைய விதிமுறைகளை அதிகாரப்பூர்வ தளங்களில் சரிபார்த்துக்கொள்வது நல்லது என்று துறைசார் வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.
English Summary
Foreign countries that allow Indians to visit as tourists without a passport