"இப்போது வரும் தமிழ் படங்களில் காதல் இல்லை... வெறும் காமம் மட்டும்தான் இருக்கிறது!" - தமிழ் சினிமாவை வெளுத்து வாங்கிய ஜோதிகா!
There is no romance in the Tamil films being released these days there is only lust Jyothika lashes out at Tamil cinema
நடிகை ஜோதிகா, சமீபத்தில் நடைபெற்ற JFW விருது வழங்கும் விழாவில் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தற்போதைய தமிழ் திரைப்படங்களில் காதலை சித்தரிக்கும் விதம் குறித்து அவர் தெரிவித்த கருத்து ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'உயிரிலே கலந்தது', 'காக்க காக்க', 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து எந்த திரைப்படத்திலும் நடிக்காத நிலையில், மீண்டும் இந்த ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், JFW நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மாபா ஆனந்த், "நீங்களும் சூர்யாவும் மீண்டும் எப்போது இணைந்து நடிக்கப் போகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜோதிகா, "நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க நல்ல கதைக்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அப்படிப்பட்ட கதை எங்களிடம் வரவில்லை. தமிழ் சினிமாவில் மிகச் சிலருக்குத்தான் உண்மையான காதலை அழகாகச் சொல்லத் தெரியும். அதனால்தான் 'சில்லுக்கருப்பட்டி' போன்ற படங்களை நான் மிகவும் பாராட்டினேன். ரொமான்ஸ் மற்றும் காதல் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக அப்படிப்பட்ட காதல் திரைப்படங்களை அதிகமாகப் பார்க்க முடியவில்லை" என்றார்.
தொடர்ந்து அவர், "இப்போது வரும் பல படங்களில் காதல் இல்லை. வெறும் காமம்தான் அதிகமாக இருக்கிறது. ஒரு பெண்ணாக அந்தப் படங்களைப் பார்க்கும்போது, அதில் காதலைவிட உடல் ஈர்ப்புதான் அதிகமாக தெரிகிறது. அதனால் நானும் சூர்யாவும் மீண்டும் இணையும் படம் காதலை அழகாகச் சொல்லும் ரொமான்டிக் கதையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அந்தப் படத்தை ஒரு பெண் இயக்குநர் இயக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்று தெரிவித்தார்.
திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, பின்னர் வலுவான கதாபாத்திரங்கள் மூலம் மீண்டும் திரையுலகில் கவனம் பெற்றார். தற்போது தமிழ் படங்களுடன் ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், கடந்த ஆண்டு வெளியான 'ஸ்ரீகாந்த்' மற்றும் 'சைத்தான்' போன்ற படங்களில் நடித்திருந்தார்.
ஜோதிகாவின் இந்தக் கருத்து, தற்போதைய தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்பது குறித்த புதிய விவாதத்தை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
There is no romance in the Tamil films being released these days there is only lust Jyothika lashes out at Tamil cinema