அதிமுகவில் அதிரடி ஆக்ஷன்...! சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் பதவிகளை கூண்டோடு பறித்தார் எடப்பாடி பழனிசாமி...!
Action AIADMK Edappadi Palaniswami snatched positions 11 supporters CV Shanmugam cage
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எதிர்பாராத பின்னடைவை சந்தித்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்து, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியும் என கட்சி இரு பிரிவுகளாக செயல்பட்டது.
பின்னர் மூத்த நிர்வாகிகளின் முயற்சியால் கட்சி மீண்டும் ஒருங்கிணைந்தாலும், சி.வி.சண்முகம் தனது அரசியல் நிலைப்பாட்டை இதுவரை வெளிப்படையாக அறிவிக்காதது தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களுக்கும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் அடிக்கடி வெடித்து வருகின்றன. மாவட்ட அளவிலான கட்சி நிகழ்வுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளிலும் இந்த உட்கட்சி முரண்பாடு வெளிப்படையாக பிரதிபலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளில் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்தக் கூட்டங்களின் போது இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகி, பின்னர் அது மோதலாக மாறியது.
குறிப்பாக செஞ்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மாவட்ட செயலாளர் பசுபதியின் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், அவரை இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், பசுபதி பயன்படுத்திய கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக வெளியான தகவல் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் பசுபதி காவலர்களிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பரபரப்பான சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 11 முக்கிய மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம் மாவட்ட இணைச் செயலாளராக இருந்த ஆனந்தி, மாவட்ட பொருளாளராக இருந்த கே.வி.என். வெங்கடேசன், மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்த ஜெயபிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் எழில்ராஜ், வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் (கிருஷ்ணன்), மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், திண்டிவனம் நகர செயலாளர் ரூபன்ராஜ் மற்றும் மயிலம் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செந்தில்குமார் ஆகியோர், இன்று முதல் அவர்கள் வகித்து வந்த அனைத்து கட்சி பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும் இடையிலான உட்கட்சி மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வந்த நிலையில், தற்போது முக்கிய நிர்வாகிகளின் பொறுப்புகள் பறிக்கப்பட்டிருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து கட்சி வட்டாரத்தில் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Action AIADMK Edappadi Palaniswami snatched positions 11 supporters CV Shanmugam cage