திமுகவில் கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு? திமுகவில் நிர்வாக மாற்றம்? உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்?
A key role for Kanimozhi in the DMK An organizational reshuffle within the party Additional powers for Udhayanidhi
திமுகவில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் கனிமொழிக்கு புதிய முக்கியப் பொறுப்பு வழங்குவது குறித்து தலைமை ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு படிப்படியாக கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மேலும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கும் அவர் தலைமை தாங்குவார் என கட்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் கட்சியின் முக்கிய அரசியல் நடவடிக்கைகளில் உதயநிதியின் பங்கு அதிகரித்து வருவதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனிடையே, திமுகவில் நடைபெறவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்படும் சில மூத்த நிர்வாகிகளுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், திமுக எம்.பி. கனிமொழிக்கு "முதன்மை துணைப் பொதுச்செயலாளர்" என்ற புதிய பொறுப்பை வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கனிமொழிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது பொறுப்பிலிருந்து விலக விரும்பாததால் அந்த விவகாரம் முன்னேறவில்லை என கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சை ஏற்பட வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் கனிமொழி தரப்பும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணியில்தான் அண்மையில் துரைமுருகனை நேரில் சந்தித்து கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து பெற்ற சம்பவமும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதன் மூலம், அடுத்தகட்ட தலைமுறை மாற்றத்திற்கான நிர்வாக கட்டமைப்பை திமுக தலைமை படிப்படியாக உருவாக்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதுகுறித்து திமுக தலைமையிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
English Summary
A key role for Kanimozhi in the DMK An organizational reshuffle within the party Additional powers for Udhayanidhi