6 மணி நேர விசாரணை...! கரூர் சம்பவம் சிபிஐ விசாரணை குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்...!
6 Hour Interrogation Senthil Balaji Clarifies Regarding CBI Probe Karur Incident
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்குப் பிறகு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கரூரில் நடைபெற்ற அந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகத் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான விளக்கம் அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, சாட்சிகள் என்ற அடிப்படையில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் குறித்து அதிகாரிகள் கேட்டதாகவும், அவற்றைப் பொதுவெளியில் பகிர முடியாது என்றும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணியாற்றியவன் என்ற முறையில், சிபிஐ எழுப்பிய சந்தேகங்களுக்குப் பொறுப்புடன் பதிலளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராவது உறுதி என்றும், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே செந்தில் பாலாஜி அங்கு வந்தது மற்றும் தவெக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் அவரிடம் துருவித் துருவி விசாரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
6 Hour Interrogation Senthil Balaji Clarifies Regarding CBI Probe Karur Incident