புதிய கட்சியை தொடங்குகிறார் முன்னாள் பாஜக அமைச்சர்! அதிர்ச்சியில் பாஜக மேலிடம்!
yashvant sinha will start new party
கடந்த 2018ஆம் வருடம் பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்கா மீண்டும் புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், கட்சியின் பெயரை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா சுமார் 24 வருடங்கள் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய பிறகு கடந்த 1986ஆம் ஆண்டு ஜனதா கட்சியில் இணைந்தார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த அவர், பின்னர் பாரதிய ஜனதாவில் இணைந்தார். பாரதிய ஜனதாவின் செய்தி தொடர்பாளராக பணியாற்றியவர் 1998 ஆம் ஆண்டு அமைந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில், நிதி அமைச்சராகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைய, பின்னர் 2009ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக அனுப்பப்பட்டார், அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்ததை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அக்கட்சியிலிருந்து அவர் ஓரங்கட்டப்பட்ட நிலையில் 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சி வந்த பிறகும், எவ்வித முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
அதிருப்தியில் இருந்து வந்த அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் இரண்டு வருடங்களுக்கு பிறகு புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் அதன் பெயரை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் நிலையைப் பார்த்து தான் மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 வருடங்களாக ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார் மாநிலத்திற்கு எவ்வித முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இதையடுத்து பீகாரை மீட்கும் வகையில் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை அமைப்போம் என அவர் சூளுரைத்துள்ளார். தற்போது நிதிஷ்குமார் ஆட்சி நடத்தி வரும் நிலையில் அந்த ஆட்சி கூட்டணியில் பாஜக இடம் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய கட்சி தொடங்கி பாஜக விற்கு எதிராக கட்சியை நடத்த போகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
English Summary
yashvant sinha will start new party