ஹைதராபாத்தில் திடீரென பால்கனி இடிந்து விழுந்து விபத்து...! பரிதாபமாக உயிரிழந்த தந்தை மற்றும் மகன்...!
Tragic Accident Hyderabad Balcony Suddenly Collapses Father and Son Lose Their Lives
பஞ்சகுட்டா காவல் எல்லைக்குட்பட்ட குண்டன்பாக் காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி தளம் ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர்.
மேலும் மற்றொரு நபர் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்தவர்கள் சீதாரம்பாக்கைச் சேர்ந்த மின் பணியாளர்களான தேவிதாஸ் (56) மற்றும் அவரது மகன் விவேக் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குண்டன்பாக் மெத்தடிஸ்ட் காலனியில் உள்ள தனது குடியிருப்பில் மின் பணிகளை மேற்கொள்வதற்காக, அந்த வீட்டின் உரிமையாளரான துவாரகா பிரசாத் இவர்களை அழைத்திருந்தார்.
இவர்கள் மூவரும் மூன்றாவது தளத்தின் பால்கனியில் நின்று பணி குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூவருமே கீழே விழுந்ததில், தேவிதாஸ் மற்றும் விவேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த பிரசாத், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானக் குறைபாடுகள் அல்லது பழைய இரும்புத் தண்டுகள் துருப்பிடித்ததே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
குறிப்பாக, பால்கனியை விரிவுபடுத்தும் பணியின்போது பழைய கட்டுமானத்திற்கும், புதிய இரும்புத் தண்டுகளுக்கும் இடையே போதிய பிணைப்பு இல்லாததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
Tragic Accident Hyderabad Balcony Suddenly Collapses Father and Son Lose Their Lives