800 மதுபான பாட்டில்களில் உள்ள சரக்கை எலி குடித்து விட்டதாக வினோதமான குற்றச்சாட்டு : நடந்தது என்ன..?
Traders in Jharkhand report rats drinking 800 bottles of liquor
ஜார்க்கண்டில் வரும் செப்டெம்பர் 01-ந் தேதி முதல் புதிய மதுபானக் கொள்கைகள் அமலாகவுள்ளது. அதன்படி, கடை ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த முறையில், அதனை ஆன்லைன் குலுக்கல் முறைக்கு மாற்றப்படவுள்ளது. இதன்மூலம் வருவாயில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன், அரசுக்கு உள்ள நெருக்கடி குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜார்க்கண்டின் தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் இருந்த 800 பாட்டில் மதுபானம் மாயமாகியுள்ளது. அந்த மதுபானம் முழுவதையும் எலிகள் குடித்து விட்டதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பாத அதிகாரிகள் , இழப்பை சரி செய்வதற்கு பணத்தை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர்.

புதிய மதுபான விதிமுறைகள் அமலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் காட்டப்படவில்லை என்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.
இது குறித்து மதுபான கடைகளை நடத்தி வருபவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதற்கு அவர்கள் அந்த பாட்டிலில் இருந்த மூடியை எலிகள் தின்றுவிட்டு மதுபானம் அனைத்தையும் குடித்து விட்டன எனத் தெரிவித்தனர். இதனை நம்பாத அதிகாரிகள் மதுபானம் விற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் இவ்வாறு ஊழலுக்கு எலிகள் மீது குற்றம்சாட்டப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் போலீஸ் பிடியில் இருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 09 கிலோ கஞ்சா இலைகளை காணவில்லை. அப்போது அவற்றை எலி தின்றுவிட்டதாக போலீசாரே நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், நீதிமன்றம் அதனை ஏற்காமல் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Traders in Jharkhand report rats drinking 800 bottles of liquor