நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை; தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு உதவி...?
NIA officers raid Nagercoil businessman house
நாகர்கோவிலில் தொழிலதிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சோதனை மேற்கொண்டதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் 62 வயதான ரஷித் அகமது. இவர் சென்னையில் கட்டிட காண்ட்ராக்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இதனால் குடும்பத்துடன் சென்னையில் தங்கியுள்ளார்.
நாகர்கோவிலில் உள்ள இவரது வீட்டில் அவரது மகன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் வீட்டில் இன்று காலையில் சென்னையில் சென்ற என்.ஐ.ஏ., அதிகாரிகள் வந்து சோதனை நடத்தியுள்ளனர்.

காலை சுமார் 06 மணி முதல் நடந்த சோதனையை தொடர்ந்து ரஷித் அகமது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் சுமார் மூன்றரை மணி நேரம் வரை நடைபெற்ற சோதனை, காலை 09.30க்கு முடிவடைந்துள்ளது. இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் எதுவும் சிக்கியதா? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் எதுவும் முழுமையாக தெரிவிக்கவில்லை. திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை தொடர்பில் என்.ஐ.ஏ. கூறியதாவது:
தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு உதவி செய்ததாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் விசாகா நகர் காவல் நிலையத்தில் 03 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது, அவர்கள் ரஷித் அகமதுவின் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் பேசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாகவும், சோதனை விபரங்களை சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர். இன்று என்.ஐ.ஏ. நடத்திய இந்த சோதனையால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
NIA officers raid Nagercoil businessman house