அமெரிக்கப் பயணத்துக்கு மறுப்பு; மத்திய அரசை சாடியுள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.!
Telangana Chief Minister Revanth Reddy slams central government for refusing US visit
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ளார். அவர் அங்கிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் சென்று, அங்கிருந்து வரும் 30-ஆம் தேதி ஹைதராபாத் திரும்ப அவர் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், ரேவந்த் ரெட்டியின் அமெரிக்கப் பயணத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் ஆகஸ்ட் 23-ஆம் தேதியே லண்டனில் இருந்து ஹைதராபாத் திரும்பவுள்ளதாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
''ரேவந்த் ரெட்டியின் அதிகாரப்பூர்வ குழு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

இங்கிலாந்து பயணத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. முதல்வர் தலைமையிலான குழு இங்கிலாந்து சென்ற பிறகே, மத்திய அரசு அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை மறுத்தது. அரசியல் ரீதியில் அனுமதி மறுக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், ரேவந்த் ரெட்டி தலைமையிலான குழு தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்கு; தெலங்கானாவுக்கு; குறிப்பாக ஹைதராபாத்துக்குக் கொண்டு வருவதே இந்த பயணத்தின் ஒரே நோக்கமாக இருந்தது. சிறந்த உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து கல்வி மற்றும் பயிற்சியைப் பெற வேண்டும் என்ற நமது இளைஞர்களின் விருப்பங்களுக்கு அவை ஒரு தீர்வாக அமைந்திருக்கும்.
தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் என்று வரும்போது, அரசியல் மற்றும் தேர்தல்களுக்கு அப்பால் நாம் சிந்திக்க வேண்டும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Telangana Chief Minister Revanth Reddy slams central government for refusing US visit