நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் மத்திய அரசின் தலையீடு; உச்சநீதிமன்ற நீதிபதி அதிருப்தி..!
Supreme Court Justice Ujjal Bhuyan expressed dissatisfaction over the central government's interference in the transfer of judges
மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் என்பவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால், இந்த முடிவை மாற்றிக்கொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து, கடந்த அக்டோபர் மாதம் அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
குறித்த நீதிபதி, பாஜக அமைச்சர் ஒருவருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்ததே, இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு காரணம் என்று சட்ட வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன், நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக நீண்ட காலமாகவே புகார்கள் எழுந்து வருகின்றது. இந்த சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், புனேவில் உள்ள ஐஎல்எஸ் சட்டக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது:

'நீதித்துறையின் சுதந்திரத்திற்கு வெளியில் இருந்து வரும் ஆபத்தை விட, உள்ளிருந்தே வரும் ஆபத்துதான் மிகப்பெரியது' என்று குறிப்பிட்டுள்ளார். நீதிபதி அதுல் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய அவர், 'அரசுக்கு எதிராக அல்லது அரசுக்கு ஆதரவில்லாத உத்தரவை பிறப்பித்தார் என்பதற்காக ஒரு நீதிபதியை ஒரு உயர்நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வது ஏன்? கொலிஜியம் அமைப்பின் முடிவுகளில் நிர்வாகத் துறையின் தலையீடு இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீதிபதியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்றும், இது முழுவதுமாக நீதித்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று கொலிஜியம் தனது முடிவை மாற்றிக் கொண்டது என்பது, அரசியலமைப்புச் சட்டப்படி சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்பில் நிர்வாகத் துறையின் ஆதிக்கம் இருப்பதை காட்டுகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், இது அரசியல் தலையீட்டை அப்பட்டமாக ஒப்புக்கொள்வதாகும் என்றும், மத்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப நீதிபதிகள் மாற்றப்பட்டால், கொலிஜியம் அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
English Summary
Supreme Court Justice Ujjal Bhuyan expressed dissatisfaction over the central government's interference in the transfer of judges