தேர்தல் ஆணையம் மீது மம்தா நம்பிக்கை பற்றைக்குறை; நீதிபதிகளை SIR பணிக்கு நியமித்துள்ள உச்சநீதிமன்றம்..!
Supreme Court appoints judges to SIR posts in West Bengal
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், ஆளும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம், தேர்தலுக்கு முன்னனதாக அவசர அவசரமாக வாக்காளர்களை நீக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த எஸ்ஐஆர் பணிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதோடு, அதற்காக வாதாடியும் உள்ளார்.
அடுத்ததாக, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வங்காள மக்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட்டார். அப்போது, வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மக்களைத் தீவிரவாதிகள் போலத் தேர்தல் ஆணையம் நடத்துவதாகவும், மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

இதேநேரம், சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் முரண்பாடு என்ற பெயரில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே மாநில அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தனது தரப்பில் எதிர் கருத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பான மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் இரு மேற்கு வங்கம் அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் நம்பிக்கை பற்றாக்குறையை சுட்டிக்காட்டி அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு, தற்போதைய மற்றும் முன்னாள் கூடுதல் மாவட்ட நீதிபதிகளை தேர்தல் பதிவு அதிகாரிகளாக நியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், நம்பிக்கை பற்றாக்குறையை ஒரு அசாதாரணமான சூழல் என்று கருதி உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலை பிப்ரவரி 28 அன்று வெளியிடவும், விடுபட்டவர்கள், நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட பின்னர் துணைப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Supreme Court appoints judges to SIR posts in West Bengal