டெல்லிக்கு ரெட் அலர்ட்; 6 மாநிலங்களுக்கு தென்மேற்கு பருவமழை எச்சரிக்கை; தமிழகத்தின் நிலை..?
Red alert for Delhi and Southwest Monsoon warning for six states
ஒட்டுமொத்த இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை தான் அதிகப்படியான மழைப்பொழிவை தருகிறது. ஜூன் மாதம் தொடங்கும் இந்த பருவகாலம், செப்டம்பர் மாதம் இறுதி வரை தொடரும். ஆகஸ்டு மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். அதன்படி, தற்போது வடமாநிலங்களில் கடுமையான மழைப் பெய்து வருகிறது. தலைநகர் டெல்லி-க்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நொய்டா, குருகிராம் உள்ளிட்ட என்.சி.ஆர் மண்டலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, நகரின் பல பகுதிகளில் மணிக்கு 15 மி.மீ வரை மழையும், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமான கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தென்மேற்கு பருவமழையின் அச்சுக்கோடு டெல்லிக்கு மேலே கடந்து செல்வதே இந்த மழைக்கு முதன்மை காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கிழக்கத்திய காற்றின் தாக்கத்தால் டெல்லி-என்சிஆர், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வார இறுதி நாட்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, ஒட்டுமொத்தப் பகுதியிலும் ஒரே சீராக இல்லாமல், 40% பரப்பளவு நிலத்தில் மழைப்பொழிவு பரவலாக இருக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த மழைப்பொழிவின் காரணமாக, டெல்லியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழே குறைந்திருப்பதோடு, காற்றின் தரம் மிதமான அளவில் உயர்ந்துள்ளது. அதிக மாசுகொண்ட டெல்லியில், இந்த மழையின் காரணமாக காற்றின் தரம் மீண்டும் சீரடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Red alert for Delhi and Southwest Monsoon warning for six states