பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் விலை உயர்வு..!
Prices of 900 essential medicines to rise starting April 1
இந்தியாவில் பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 01 முதல் உயர்வடையவுள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வகைப்படுத்தப்பட்ட மருந்து வகைகளின் அதிகபட்ச சில்லறை விலையை, அரசாங்கத்தின் முன் அனுமதி தேவையின்றி உற்பத்தியாளர்கள் உயர்த்தலாம் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, இந்த உயர்வு சுமார் 0.65% ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் , 2025-ஆம் ஆண்டுக்கான மொத்த விலைக் குறியீட்டில் 0.64956 சதவீதம் உயர்ந்த மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சிறிய அதிகரிப்பு அமைந்துள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட மருந்துகளில், வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட சுமார் 900 மருந்துக் கலவைகள் இதில் அடங்குகிறது. இருப்பினும், 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலை உயர்வு மிகக் குறைவாகவே உள்ளது.
இந்த விலை ஏற்றத்திற்கும், தற்போது மத்திய கிழக்கில் நடந்து வரும் ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் போருக்கும் தொடர்பில்லை என இந்திய மருந்துத் தொழில் கூட்டமைப்பின் ஆலோசகர் வினோத் கலானி தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே காரணம் என கூறப்படுகிறது.
English Summary
Prices of 900 essential medicines to rise starting April 1