02 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்த மக்கள் மருத்துவர் காலமானார்..!
Peoples doctor who provided medical treatment for Rs 02 passes away
கேரளாவில் வெறும் 02 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த ஏகே ரைரு கோபால் என்ற மருத்துவர் 80 வயதில் இன்று காலமானார். இவர் கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.02-க்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். மருத்துவர்கள் ஒருமுறை மருத்துவ ஆலோசனை வழங்க ரூ.100-க்கும் அதிகமாக கட்டணம் வசூலித்து வந்த நிலையில், இவரது சேவை ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து இருந்தது.
இவர் பணியின் போது நோயாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்று சிகிச்சை அளித்த போது, அங்கு காணப்பட்ட கொடுமையான நிலைமையை கண்டு, இந்த மருத்துவ சேவைப் பயணத்தை தொடங்கியுள்ளார். குறிப்பாக கூலி தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் மாணவர்களுக்காகவே தன்னையும், தனது மருத்துவ சேவையையும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
ஏகே ரைரு கோபால் தினமும் அதிகாலை 02.15 மணிக்கு தூங்கி எழுந்து, பசு மாடுகளை பராமரிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார். பின்னர் பால் கறந்து, அதனை விநியோகமும் செய்துள்ளார்.
அதன் பின்னர், காலை 06.30 மணி முதல் தனது கிளினிக்கில் மருத்துவ சேவையை தொடர்ந்துவந்துள்ளார். நோயாளிக்கு தேவைப்பட்டால், அதிகாலை 03 மணி முதலே மருத்துவ சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளதோடு, நாளொன்றுக்கு 300 பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும் செய்துள்ளார்.
இவருக்கு இவரது மனைவி சகுந்தலா துணையாக இருந்து வந்துள்ளார். அவர் சிகிச்சை பெற வரும் கூட்டத்தை கவனித்தல், மருந்துகளை வழங்குதல் போன்ற உதவிகளை செய்து வந்துள்ளார். தனது உடல்நிலை மோசமடைந்த போதும், அவர் மருத்துவ சேவை வழங்குவதை அவர் நிறுத்தவில்லை.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மக்கள் மருத்துவர் என்று போற்றப்பட்ட ரைரு கோபால் இன்று காலமானார். தற்போது மருத்துவம்வியாபாரமாகி விட்ட நிலையில், அதனை பொதுச் சேவையாக செய்து வந்த இவரது மறைவு, பொது மக்களுக்கு பேரிழப்பாகும். டாக்டர் ரைரு கோபாலின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
English Summary
Peoples doctor who provided medical treatment for Rs 02 passes away