கணவனின் இரண்டாவது திருமணத்தை தடுக்க பிரதமர் மோடியின் உதவியை நாடும் பாகிஸ்தான் பெண்..!
Pakistani woman seeks PM Modi's help to stop husbands second marriage
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் நிகிதா என்பவருக்கும், அந்நாட்டை சேர்ந்த விக்ரம் என்பவருக்கும், ஹிந்து பாரம்பரிய முறைப்படி கராச்சியில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு 2020 பிப்ரவரி 26-இல் நிகிதாவை இந்தியாவுக்கு விக்ரம் அழைத்து வந்துள்ளார். இவர் நீண்ட கால விசாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வந்துள்ளார்.
அதே ஆண்டு ஜூலை மாதம் விசாவில் பிரச்சினை எனக்கூறி, நிகிதாவை அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு வலுக்கட்டாயமாக விக்ரம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணால், விக்ரமை தொடர்பு கொள்ளவில்லை. அத்துடன் கணவனும் தன்னை அழைக்க முயற்சிக்கவில்லை என நிகிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நிகிதா வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: என்னை அழைத்துக் கொள்ளும்படி பல முறை விக்ரமிடம் வலியுறுத்தினேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் மறுத்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திருமணம் முடிந்து கணவர் வீட்டிக்கு வந்த போது, மாமியார், மாமனார் உள்ளிட்டோரின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறின என்றும், எனது உறவுப்பெண் ஒருவருடன், விக்ரமுக்கு திருமணத்தை மீறிய உறவு உள்ளது. இதனை மாமனாரிடம் தெரிவித்த போது, ஆண்கள் அப்படி செய்வது வழக்கம். அதில் ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும், தனக்கு நீதி கிடைக்காவிட்டால், பெண்கள் அனைவரும் நீதி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ள நிகிதா, ஏராளமான பெண்கள், திருமணமான பின்பு உடல் மற்றும் மன ரீதியாக பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அனைவரும் எனக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதோடு, தனக்கு நீதி கிடைக்க பிரதமர் உதவி செய்ய வேண்டும் எனவும் வீடியோவில் கூறியுள்ளார்.
தற்போது, விக்ரம் டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்வதாக நிகிதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக மபி உயர்நீதிமன்றம் அமைத்த சட்ட உதவி மையம் விசாரணை நடத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரமுக்கும் அவர் திருமணம் செய்ய உள்ள பெண்ணுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், ஆனால், சமரச முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்ட பெண் இந்தியாவைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், இந்த விவகாரம் பாகிஸ்தான் சட்ட வரம்பில் வருகிறது. விக்ரமை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த உத்தரவிடும்படி தெரிவித்து இருந்தது.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் சிங் தெரிவித்துள்ளார்.
English Summary
Pakistani woman seeks PM Modi's help to stop husbands second marriage