விபத்துக்கு பிறகு உரிமையாளர்கள் வெளிநாடு ஓட்டம்: லுத்ரா சகோதரர்கள் மீது இண்டர்போல் வேட்டை தொடக்கம்!
Owners flee abroad after accident Interpol hunt begins Luthra brothers
கோவாவின் வடபகுதியில் உள்ள அமைதியான அர்போரா கிராமத்தை அச்சுறுத்தும் வகையில், ‘ரோமியோ லேன்’ எனப்படும் பிரபல இரவுவிடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென கொடூரமான தீவிபத்து வெடித்தெழுந்தது. தலைநகர் பனாஜியிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த இந்த ரிசார்ட், சிலிண்டர் வெடிப்பால் நொடிகளில் தீக்கிரையானதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீஸ் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்ததும், தீயின் சீற்றம் ஏற்கெனவே உயிர்களைப் பலிகொண்டிருந்தது. 25 பேர் உயிரிழந்த இந்த துயரச் சம்பவத்தில், பெரும்பாலோர் சமையல் பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள்.

3 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்கள் கைப்பற்றப்பட்டு, அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.முதல்வர் பிரமோத் சவந்த் நேரடியாக சம்பவ இடத்தைப் பார்வையிட்டபோது தெரிவித்ததாவது,"பலியானவர்களில் 3 முதல் 4 பேர் சுற்றுலா பயணிகள்.
தீக்காயத்தால் உயிரிழந்தோர் 3 பேர் மட்டுமே; மற்றவர்கள் பெரும்பாலும் நச்சு புகை சுவாசித்து மூச்சுத்திணறி இறந்துள்ளனர். சுற்றுலா சீசன் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட விபத்து நிகழ்ந்தது மிகுந்த துரதிருஷ்டவசமானது. ஆரம்ப விசாரணையில் ரிசார்ட் நிர்வாகம் தீ பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக மீறி செயல்பட்டது உறுதியானது.
இதற்கு காரணமான நிர்வாகத்தினரையும், பொறுப்பில்லாமல் அனுமதி வழங்கிய அதிகாரிகளையும் எதிர்த்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.இந்த துயரச் சம்பவத்திற்குப் பின்னர் கோவா போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். ரிசார்ட் உரிமையாளர்கள்,டெல்லி வாழ் சகோதரர்கள் கவுரவ் மற்றும் சவுரப் லுத்ரா,வீட்டில் இல்லை என்பதால், அவர்களை நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தவிர்க்க ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியிட அதிகாரிகளுக்கு போலீசார் அறிவித்தனர்.
ஆனால் அதற்குள், மும்பை விமான நிலைய குடியேற்றத்துறையினர் அவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 5.30 மணிக்கே இண்டிகோ விமானம் மூலம் தாய்லாந்தின் புக்கெட் நகரத்திற்கு தப்பிச் சென்றதைப் புலனாய்வு செய்தனர்.உள்நாட்டு இண்டிகோ சேவை பாதிக்கப்பட்டிருந்தபோதும், சர்வதேச சேவை சிறிதும் பாதிக்கப்படாதது அவர்கள் நாட்டை விட்டுச் செல்ல வாய்ப்பை ஏற்படுத்தியது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு முன்பே தப்பித்துச் செல்லும் அவர்களின் நடவடிக்கை, குற்றச்சாட்டு வலுவாக இருப்பதை உணர்த்துவதாக போலீசார் கூறுகின்றனர்.இதையடுத்து, லுத்ரா சகோதரர்களை நாடுகடந்து தேடி பிடிக்க இண்டர்போல் ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்க சிபிஐ உதவியை கோவா போலீசார் உத்தியோகபூர்வமாக நாடியுள்ளனர்.
English Summary
Owners flee abroad after accident Interpol hunt begins Luthra brothers