பஞ்சாப் அரசுக்கு அபராதம்... தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!
national green tribunal fine for punjap government
பஞ்சாப் மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,000 கோடி அபராதம் விதித்தது பஞ்சாப் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடக்கழிவு மற்றும் திரவக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாத பஞ்சாப் அரசுக்கு, ரூ.2,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை சுற்றுச்சூழலுக்கு இழப்பீடாக வழங்க பஞ்சாப் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ளது.
நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்ததாவது, "மாசுபாட்டைத் தடுப்பதற்கான பஞ்சாப் அரசின் பங்களிப்பு மற்றும் அவர்களின் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்கு அந்த மாநில அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விவகாரத்தில் பஞ்சாப் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தது. இருந்தாலும், இதுவரை பஞ்சாப் மாநில அரசு, திட மற்றும் திரவக் கழிவுகளை சரியான முறையில் மேலாண்மை செய்யத் தவறிவிட்டது.
பஞ்சாப் அரசுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்ததைக் கேட்காதபோதிலும், என்ஜிடி தனது நடவடிக்கையைத் தொடர்ந்தது. இப்போது ரூ.2,000 கோடிக்கு மேல் அபராதம் விதித்துள்ளது. இதற்கு முன்னதாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் திட மற்றும் திரவக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாததற்காக சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையாக ரூ.3,000 கோடி வழங்குமாறு ராஜஸ்தான் அரசுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, திரவக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாததற்காக உத்தரபிரதேச மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
national green tribunal fine for punjap government