22,000இல்லை, 21,803 இறப்புகள் மட்டுமே... ஸ்டாண்டு அப் காமெடியன் VS ரயில்வே!
Kunal Kamra Railways fact check train accident
மும்பை: பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ரா, தான் சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில் 2023-ஆம் ஆண்டில் ரயில் விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களைப் பேசியது பெரும் சர்ச்சையாகி, ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ மறுப்புக்கு வித்திட்டுள்ளது.
முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே குறித்துப் பாடிய பாடல் மூலம் இவர் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.
குணால் கம்ராவின் கூற்று:
2023-ஆம் ஆண்டில் சுமார் 25,000 ரயில் விபத்துகளில் கிட்டத்தட்ட 22,000 பேர் உயிரிழந்ததாகக் குணால் கம்ரா தனது ஷோவில் பேசினார்.
ரயில்வேயின் மறுப்பு:
இந்தக் கூற்றுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு அறிக்கையில், குணால் கம்ராவின் கூற்று தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது:
விபத்துகள்: 25,000 விபத்துகள் என்பது தவறானது. அந்த ஆண்டில் நடந்த உண்மையான விபத்துகளின் எண்ணிக்கை 24,678 மட்டுமே.
உயிரிழப்பு: 22,000 இறப்புகள் என்ற கூற்றுக்குப் பதிலாக, உண்மையில் 21,803 இறப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
இந்த அதிகாரப்பூர்வ விளக்கம், ரயில்வே நிர்வாகம் சிறிய வேறுபாடுகளைக் கூடத் திருத்தி வெளியிட்டதால், இணையத்தில் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இதற்கு உடனடியாகப் பதிலளித்த கம்ரா, தான் கூறியதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
குறிப்பாக, 2023-இல் ஒடிசாவில் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 296 பேர் உயிரிழந்ததுடன், 1,200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kunal Kamra Railways fact check train accident