'பார்முலா - இ' கார் பந்தய வழக்கு: ஊழல் தடுப்பு பிரிவு முன் ஆஜரான கே.டி.ராமாராவ்..!
KD Rama Rao appears before the Anti Corruption Bureau in connection with the Formula E car racing case
ஹைதராபாதில் நடந்த, 'பார்முலா - இ' கார் பந்தய வழக்கு தொடர்பாக, பாரத் ராஷ்ட்ர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமாராவிடம், தெலுங்கானா அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். காலை 10:00 மணிக்கு துவங்கிய விசாரணை, மாலை 06:00 மணி வரை நடந்துள்ளது. ராமாராவிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்பு சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியின் போது, 2023-இல், 'பார்முலா-இ' கார் பந்தயம் நடத்தப்பட்டது. அந்த கார் பந்தயம் நடத்தியதில் சந்திரசேகர ராவ் மகனும், அப்போதைய அமைச்சருமான கே.டி.ராமாராவ் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது, குறித்த கார் பந்தயம் நடத்திய வெளிநாட்டு நிறுவனத்துக்கு, அமைச்சரவை அனுமதியின்றி பணம் அளிக்க அங்கீகாரம் அளித்தார் என புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை மீறி, 45 கோடி ரூபாய் வரை அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தெலுங்கானா அரசுக்கு ரிசர்வ் வங்கி, 08 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.
இதையடுத்து ராமாராவ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. குறித்த விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமாராவ் கூறுகையில், “இது ஒரு அரசியல் துன்புறுத்தல். ஒருவேளை அவர்கள் என்னை கைது செய்யலாம். தெலுங்கானா மாநில அந்தஸ்துக்காக முன்பே சிறை சென்றுள்ளேன். ஹைதராபாதின் பெயரை உலகறியச் செய்ய எடுக்கப்பட்ட முடிவிற்காக, 100 முறை கூட சிறைக்குச் செல்லத் தயார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
KD Rama Rao appears before the Anti Corruption Bureau in connection with the Formula E car racing case