எதிர்வரும் வரும் 21 அல்லது 27-ஆம் தேதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைக்கவுள்ளார்..!
Chief Minister MK Stalin will inaugurate the Valluvar Kottam on the 21st or 27th of this month
1976-ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டு, சுற்றுலா தளமாக விளங்கி வந்ததது. சென்னையில் நுங்கம்பாக்கம் – கோடம்பாக்கம் நெடுஞ்சாலை சந்திப்பில், 05 ஏக்கர் பரப்பளவில் 1974-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
கலைஞரின் நேரடி கண்காணிப்பில் சிற்பி கணபதியை கொண்டு அடிக்கல் நாட்டிய பின்பு, சிற்ப வேலைபாடுகளுடன், கல்லால் செதுக்கப்பட்ட சிற்பத்தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு காந்தார கலை வடிவில் தோரண வாயிலும், திராவிட கட்டிடக் கலை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டது. 3,000 பேர் அமரும் வகையிலான அரங்கமும், இந்த அரங்கத்தின் மேல் பகுதியில் குறள் மணிமாடம் ஒன்றும் உள்ளது. அதில் 1300 குறள்களும் கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டது.

எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக திருவாரூர் ஆழித்தேரை மாதிரி வடிவமாக கொண்டு, பல்லவக்கலை சிற்ப வேலைபாடுகளுடன் 128 அடி உயரம் கொண்ட விண்ணை முட்டுவதை போன்று உணர்வை தரும் வகையிலாக கல்தேர் செதுக்கப்பட்டது.
ஆனால், கடந்த ஆட்சியில் உரிய முறையில் வள்ளுவர் கோட்டம் பராமரிக்கப்படாததால், சிதிலமடைந்து தனது பொலிவை இழந்து மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை மீண்டும் புனரமைக்க முடிவெடுத்து ரூ.80 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் புனரமைப்பு மேம்பாட்டு பணிகளில் கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாக சுற்றுச் சுவர் புதுப்பித்தல், தூண்கள், நுழைவாயில் பகுதிகளில் சிற்ப வேலைபாடுகள், மாற்றுத் திறனாளிகள் நடைபாதை என புதிய வடிவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரமாண்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, வரும் 21 அல்லது 27-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு தேதி இறுதி செய்யப்பட்டு அன்றைய தினம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் வள்ளுவர் கோட்டம் திறப்பு விழா காண இருக்கிறது.
English Summary
Chief Minister MK Stalin will inaugurate the Valluvar Kottam on the 21st or 27th of this month