பஹல்காம் தீவிரவாதிகள் சென்னையில் இருந்து இலங்கை விமானத்தில் சென்றதாக வெளியான தகவல் புரளியா..?
Is the information that the Pahalgam terrorists left Chennai for Sri Lanka on a flight a hoax
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானத்தில் சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் பஹ்ல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ., அதிகாரிகள் அடையாளம் கண்டு, அவர்களின் போட்டோக்களை வெளியிட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 05 பயங்கரவாதிகள் என கூறப்பட்டது.
குறித்த 05 பயங்கரவாதிகளும் சென்னையில் இருந்து நண்பகல் 11.59-க்கு இலங்கை சென்ற விமானத்தில் தப்பிச் சென்றதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு இமெயில் வந்துள்ளது. இதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ந்து சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், சென்னையில் இருந்து விமானம் இலங்கைக்கு புறப்பட்டு சென்று விட்டதால், உடனடியாக கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு, இது பற்றி தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் கொழும்பு விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனால், சந்தேகிக்கும்படியான நபர்கள் யாரும் இல்லை என்று உறுதியானது. அதன்பிறகு, அந்த இமெயில், புரளி என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
English Summary
Is the information that the Pahalgam terrorists left Chennai for Sri Lanka on a flight a hoax