தேனிலவில் நேர்ந்த பயங்கரம்: கணவனைக் கொன்றதாகக் கைதான மனைவிக்கு 10 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்!
Honeymoon Horror Wife Accused of Murder Granted Bail After 10 Months in Shillong Jail
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகிய இருவரும் கடந்த மே 2025-ல் மணவாழ்க்கையைத் தொடங்கினர். தங்களது புதிய வாழ்க்கையின் இனிமையான தொடக்கமாக அவர்கள் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர். ஆனால், அந்தப் பயணம் ஒரு பயங்கரமான துயரத்தில் முடிந்தது. மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் ராஜா மாயமானார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, ஜூன் 2 அன்று ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், இது தற்செயலான விபத்து அல்ல, மாறாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு கொடூரக் கொலை என்பது அம்பலமானது. சோனம் தனது காதலன் ராஜா குஷ்வாஹா மற்றும் மேலும் மூன்று பேருடன் இணைந்து தனது கணவனைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, கடந்த 10 மாதங்களாக மேகாலயாவின் ஷில்லாங் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சோனமின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே மூன்று முறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. இருப்பினும், அவர் தாக்கல் செய்த நான்காவது மனுவை விசாரித்த ஷில்லாங் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
காவல்துறையினர் சமர்ப்பித்த ஆவணங்களில் இருந்த சில குளறுபடிகளே சோனமுக்குச் சாதகமாக அமைந்து ஜாமீன் கிடைக்கக் காரணமாகின.
தற்போது அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், ஷில்லாங் மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அவரது காதலன் குஷ்வாஹா உட்பட மற்ற நான்கு பேர் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.
இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படும் ஒருவருக்கு, வெறும் ஆவணக் குளறுபடிகளால் ஜாமீன் கிடைத்தது நீதித்துறையின் பலவீனமா? அல்லது காவல்துறையில் அலட்சியமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.
English Summary
Honeymoon Horror Wife Accused of Murder Granted Bail After 10 Months in Shillong Jail