பெங்களூருவில் கோரத்தாண்டவம் ஆடிய கனமழை...! சுவர் இடிந்து 8 பேர் உடல் நசுங்கி பலி...! - பிரதமர் மோடி உருக்கம்...!
Heavy rains lashed Bengaluru 8 people crushed death after wall collapses Prime Minister Modi anger
வட கர்நாடகத்தின் ராய்ச்சூர், பல்லாரி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் சமீப நாட்களாக 100 டிகிரியை மீறிய கொதிநிலை வெயில் மக்கள் வாழ்வை சிரமப்படுத்தியது. கடும் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை உருவானது.
இதற்கிடையில், பெங்களூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்திருந்தது. அதன் அடிப்படையில், வட கர்நாடகத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.இந்நிலையில், பெங்களூருவில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் கடுமையாக தாக்கம் செலுத்தியது.

பின்னர் மதியத்துக்கு பின் வெப்பத்தின் தீவிரம் படிப்படியாக குறைந்த நிலையில், மாலை 4 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை நகரை முழுவதும் மூழ்கடித்தது. பலத்த சூறைக்காற்று வீசியதுடன், நகரின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. வானிலையின் இந்த திடீர் மாற்றம் நகரவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆனால் இந்த மழை மகிழ்ச்சியை மட்டுமல்ல, பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. சூறைக்காற்றின் தாக்கத்தில் பல இடங்களில் பெரிய மரங்களும் கிளைகளும் முறிந்து விழுந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சரிந்து விழுந்ததால் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
முறிந்த மரங்களை அகற்ற மாநகராட்சி பணியாளர்கள் விரைவாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கோடை வெப்பத்தில் தவித்த மக்களுக்கு, இரவு 7 மணி வரை நீடித்த கனமழை சற்று நிம்மதியை அளித்தாலும், அதே மழை ஒரு துயரச் சம்பவத்தையும் ஏற்படுத்தியது. பெங்களூருவில் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மழையில் தஞ்சம் தேடியவர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.
மேலும் பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், முதல்-மந்திரி சித்தராமையா உடனடியாக இடத்திற்கு சென்று அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவுகளை அரசு ஏற்கும் என்றும் அவர் அறிவித்தார்.இதனையடுத்து, இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கனமழையால் மருத்துவமனை சுவர் இடிந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Heavy rains lashed Bengaluru 8 people crushed death after wall collapses Prime Minister Modi anger