முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..!!
Former union minister Sharad Yadav passes away
முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் ஐக்கிய ஜனதா தளம கட்சி தலைவருமான சரத் யாதவ் தனது 75வது வயதில் நேற்று (ஜன.12) இரவு காலமானார். முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்த நிலையில் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999 முதல் 2004 வரை மத்திய அமைச்சராக இருந்தவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதிஷ்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் சரத் யாதவ் லோக் தந்திரிக் ஜனதா தளம் என்ற கட்சியை துவங்கினார். கடந்த மார்ச் 2022ல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு சரத் யாதவ் கட்சியை நிதிஷ் குமார் கட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலை குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். சரத் யாதவ் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
English Summary
Former union minister Sharad Yadav passes away