'மேக் இன் இந்தியா'; இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் ஏகே-203 ‘ஷேர்’ ரக துப்பாக்கி வெற்றிகரமாக சோதனை..!
First AK 203 Sher rifle made with Indian components successfully tested
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில், இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் ஏகே-203 ‘ஷேர்’ ரக துப்பாக்கி, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்துவரும் பழைய மாடல் 'இன்சாஸ்' ரக துப்பாக்கிகளுக்குப் பதிலாக நவீன ரக துப்பாக்கிகளை சுயமாக தயாரிக்கும் நோக்கில், கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய மற்றும் ரஷ்ய கூட்டு முயற்சியில் 'இண்டோ-ரஷ்யன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் தொடங்கப்பட்டது.
அதாவது, பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உத்திரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கோர்வா ஆயுத தொழிற்சாலையில் ஏகே-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நூறு சதவீதம் உள்நாட்டு பாகங்கள் மற்றும் இந்திய மூலப்பொருட்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட முதலாவது ஏகே-203 'ஷேர்' ரக துப்பாக்கி அங்கு வெற்றிகரமாக சுட்டுப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரு நிமிடத்திற்கு 700 குண்டுகளை சுடக்கூடியதும், 800 மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதும், 7.62x39 மி.மீ. அளவுடையதுமான இந்த துப்பாக்கி குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மேஜர் ஜெனரல் எஸ்.கே.சர்மா கூறியதாவது;
முற்றிலும் இந்திய தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த முதல் துப்பாக்கியின் தொடர் துப்பாக்கிச் சூடு சோதனை முடிவுகள் மிகுந்த உற்சாகத்தை தருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விரைவில் 100 வினாடிகளுக்கு ஒரு துப்பாக்கி என்ற வேகத்தில் உற்பத்தி தீவிரப்படுத்தப்படும் என்றும், ராணுவத்தின் பரிசோதனைக்காக வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாதிரி துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு, திட்டமிட்ட இலக்கை விட ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே சுமார் 06 லட்சம் துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்கு முழுமையாக வழங்கப்படும் இன்று அறிவித்துள்ளார்.
English Summary
First AK 203 Sher rifle made with Indian components successfully tested