முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? டெஸ்ட்டுக்கு போன ரிப்போர்ட் வந்தாச்சு! கர்நாடக அரசு வெளியிட்ட ஆய்வு அறிக்கை!
Does eating eggs cause cancer The test report is back The Karnataka government released a research report
முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ‘நைட்ரோஃபுரான்’ என்ற தடை செய்யப்பட்ட வேதிப்பொருள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல், கடந்த சில நாட்களாக கர்நாடக மக்களிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, குறைந்த விலையில் அதிக புரோட்டீன் சத்து தரும் முக்கிய உணவான முட்டையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வோர் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல முட்டை உற்பத்தி நிறுவனமான ‘எகோஸ்’ தயாரிக்கும் முட்டைகளில், மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ‘நைட்ரோஃபுரான்’ மருந்தின் தடயங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றும், ஆய்வக அறிக்கையுடன் பரவியது. ‘ஆன்டிபயாடிக் இல்லாத முட்டைகள்’ என விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மருந்து இருப்பதாக கூறப்பட்டதால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கலக்கம் உருவானது.
‘நைட்ரோஃபுரான்’ என்பது முன்பு கோழி, பன்றி, இறால் போன்ற உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் நோய்களைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மருந்தாகும். ஆனால், இது மனித உடலுக்கு நீண்ட காலத்தில் புற்றுநோய், மரபணு சேதம் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அதன் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், கோழி வளர்ப்பில் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதற்கு பதிலளித்த ‘எகோஸ்’ நிறுவனம், தங்களது பண்ணைகளில் எந்த தடை செய்யப்பட்ட மருந்துகளும் பயன்படுத்தப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்ட அளவு உணவு பாதுகாப்பு ஆணையம் அனுமதித்த வரம்புக்குள் தான் இருப்பதாகவும் விளக்கம் அளித்தது. தீவனம், நீர் அல்லது சுற்றுப்புறச் சூழல் காரணமாக சில தடயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், தங்களது முட்டைகள் பாதுகாப்பானவை என்றும் தெரிவித்தது.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட உணவு பாதுகாப்பு ஆணையம், கர்நாடகா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து முட்டை மாதிரிகளை சேகரித்து, இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, சிவமொக்கா, பல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
தற்போது அந்த ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. பரிசோதிக்கப்பட்ட எந்த முட்டை மாதிரியிலும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சுகள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முட்டையில் புற்றுநோய் நச்சு இருப்பதாக தகவல் பரவியதால் மக்கள் அச்சமடைந்தனர். மக்களின் சந்தேகங்களை போக்க பல மாவட்டங்களில் இருந்து மாதிரிகள் எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பினோம். பரிசோதனை முடிவில் எந்த நச்சும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானது. பொதுமக்கள் அச்சமின்றி முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
ஒரு வாரமாக நீடித்த குழப்பம் மற்றும் கலக்கத்திற்கு அரசு அளித்த இந்த விளக்கம், கர்நாடக மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அதேபோல், இந்த தகவல் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
Does eating eggs cause cancer The test report is back The Karnataka government released a research report